நடிகைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது; நடிகை அனுபமா

தமிழ் சினிமாவில் கொடி படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை அனுபமா கூறியதாவது:-

நடிகைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அவர்கள் வலிமையான மனதோடு இருக்க வேண்டும். படங்கள் தோல்வியானால் என்ன செய்வாய் என்று என்னிடம் கேட்பவர்களிடம் எனது படிப்புக்கு ஏற்ற வேலையை பார்ப்பேன் என்று பதில் சொல்லி வருகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டிகள் கொடுத்து சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்கு ஆளானேன்.

ரொம்ப அகங்காரம் பிடித்தவள் என்றும் பேசினர். இது வருத்தமாக இருந்ததால் மலையாளத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தேன். எனது கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனது தலைமுடி அடர்த்தியாக இருக்கும். தினமும் தேங்காய் எண்ணை தேய்க்கிறேன்.

நடிகைகள் மீது பொறாமை கிடையாது. சக நடிகைகள் நடிப்பு பிடித்து இருந்தால் போன் செய்து பாராட்டுவேன். 3 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். எதிர்காலத்தில் டைரக்டராவேன். இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.