பொழுதுபோக்குத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது; நடிகை கங்கானா ரனாவத்

நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான ரவி கிஷன், ''இந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு இவர்களின் துணைகொண்டு செயல்பட்டு இந்திய இளைஞர்களை நாசமாக்குவதாகவும்'' குற்றம் சாட்டினார்.

இது குறித்து ராஜ்யசபையில் பேசிய ஜெயாபச்சன், சினிமா பிரபலங்களை தொடர்ந்து வசைபாடுவதை தடுக்க வேண்டும். சினிமா மூலம் புகழ் பெற்றவர்கள் அந்த துறையையே அவதூறாக பேசி வருகின்றனர். ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சினிமாவையும் அசிங்கப்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் பல திரைப்பிரபலங்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் பற்றி சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துகளைக் கண்டு தான் வருந்துவதாகவும், திரைத்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என கூறினார்.

இந்த நிலையில் தனது டுவிட்டரில் இது குறித்து கங்கானா ரனாவத் கூறியிருப்பதாவது:- பொழுதுபோக்குத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது. விளக்குகளும், கேமராவும் நிறைந்திருக்கும் இந்த போலி உலகம், மாற்று யதார்த்த உலகம் என்ற ஒன்று இருப்பதாக ஒருவரை நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாயையைப் புரிந்து கொள்ள, மிக வலிமையான ஆன்மிக மனத்தால் மட்டுமே முடியும் என்று கங்கணா பகிர்ந்துள்ளார். மேலும் இதனுடன் கண்ணாடியைப் பார்த்து லிப்ஸ்டிக் அணிந்து கொள்ளும் புகைப்படம் ஒன்றை இதனுடன் பகிர்ந்துள்ளார்.