வரப்போகிற கணவர் இப்படி இருக்க வேண்டும்; நடிகை நிவேதா தாமஸ் எதிர்பார்ப்பு

சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார்.

அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- வாழ்க்கையில் எல்லோரும் காதலிக்க வேண்டும் என்ற அவசியமோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. நான் நேரம் வரும்போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். எதிர்காலத்தில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு நான் இருக்கிறேன். ஆனால் வரப்போகிற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில எதிர்பார்ப்புகள் வைத்துள்ளேன்.

அவர் உண்மையாக இருக்க வேண்டும். யாரும் உண்மையாக இருப்பவர்களைத்தான் விரும்புவர். இல்லாதபோது ஒருமாதிரி பேசி விட்டு நேரில் வேறு மாதிரி பேசுபவர்களை பிடிக்காது. கணவராக வருகிறவர் எனது பொறுப்புகளை பகிர்ந்துகொள்பவராகவும், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.