நடிகை பார்வதி படத்தை திரையிட அனுமதி மறுப்பு

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக மரியான், கமல்ஹாசனின் உத்தமவில்லன், ஸ்ரீகாந்துடன் பூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சித்தார்த் சிவா இயக்கத்தில் வர்த்தமானம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் ரோஷன் மாத்யூ, சித்திக் ஆகியோரும் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த பிரச்சினையை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளதாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான காட்சிகள் படத்தில் உள்ளன என்றும், எனவே வர்த்தமானம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தினர்.

இந்த படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் தேசவிரோத கருத்துகள் உள்ளதாக தெரிவித்து படத்தை திரையிட அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதையடுத்து படத்தை மும்பையில் உள்ள மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளது.