இப்போது திருமணம் வேண்டாம்...நடிகை பூர்ணா தகவல்

ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பூர்ணா. இவரிடம் சமீபத்தில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் தாங்கள் துபாய் தொழிலதிபர் குடும்பத்தினர் என்று கூறி பூர்ணாவை பெண் கேட்டு பேசினர். அதன் பின்னர் அந்த கும்பல் போலியானவர்கள் என்றும், மிரட்டி பணம் பறிக்கும் கும்பம் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து பூர்ணாவின் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 10 பேர்களை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் இன்றும் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக நடிகை பூர்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். இந்த நிலையில் துபாய் தொழிலதிபர்கள் என்று பெண் கேட்டு ஒரு கும்பல் வந்தனர். அவர்களுக்கு நானும் எனது குடும்பத்தினர்களும் சம்மதம் தெரிவித்தோம். மேலும் என்னை மணக்க இருந்தவருடன் நானும் அவரும் திருமணத்துக்குப் பிறகு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்து பேசினோம்.

இந்த நிலையில்தான் திடீரென்று எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து விட்டது. அவர்கள் முற்றிலும் போலி கும்பல் என்றும், அன்பாக பேசி எங்களை ஏமாற்றி உள்ளார்கள் என்றும் தெரிந்து உள்ளது. எனவே திருமணம் என்று நினைத்தாலே எனக்கு அச்சம் வருகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. இப்போது திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள தற்போது நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன் இவ்வாறு நடிகை பூர்ணா கூறியுள்ளார்.