பாலியல் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடிகை ரியா சக்கரவர்த்தி புகார்!

பாலிவுட் திரையுலகின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் சமீபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தி திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கரவர்த்தியிடமும் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரியா சக்கரவர்த்தி சுஷாந்துக்கு மன அழுத்தம் இருந்தது என்றும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு ரியா சக்கரவர்த்தி காரணம் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் கிளம்பின. இதுகுறித்து வலைத்தளத்தில் ரியா சக்கரவர்த்தி கூறும்போது; நான் பணத்துக்காக பழகினேன் என்றனர். கொலைகாரி, ஒழுக்கம் கெட்ட பெண் என்றார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரியா சக்கரவர்த்தி மும்பை சாந்தா குரூஸ் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று தனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் அளித்தார்.

அவர்கள் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் கமிஷனர் அபிஷேக் கூறும்போது; 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.