சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் துவேஷத்தை காட்டுகிறார்கள்; நடிகை தமன்னா

சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் துவேஷத்தை காட்டுகிறார்கள் என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விஷயங்கள் அதிகம் வருகிறது. ஒருவர் மீது ஒருவர் துவேஷத்தை காட்டுகிறார்கள். இப்போது எல்லோரும் அசாதாரமான நிலையில் கொரோனா என்ற பெரிய விபத்தை எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த கொரோனாவை எப்போது ஒழிப்பது, இது எப்போது நம்மை விட்டு போகும், எப்போது நாமெல்லாம் சுதந்திரமாக இருக்க போகிறோம் என்ற கவலை உள்ளது. இந்த நேரத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம்.

அடுத்தவர்களை நேசிக்க வேண்டும். நமது குடும்பம் மட்டுமின்றி உலகத்தில் உள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அன்பை பகிர்ந்து கொடுக்க வேண்டும். துவேஷத்தை கொடுக்க கூடாது.

சமூக வலைத்தளங்களை ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தலாம். ஒருவரை நிந்தனை செய்யவோ, திட்டவோ, எதிர்மறை விஷயங்களை வெளிப்படுத்தவோ பயன்படுத்த கூடாது.

நமது எண்ணங்கள் சுற்றிலும் ஒரு சக்தியை உருவாக்குகிறது என்பதை நம்புகிறேன். நேர்மறையாக யோசித்தால் சுற்றி இருப்பவர்களும் அதே போல் யோசித்து உங்களோடு இணைவார்கள். ஒருவேளை எதிர்மறையாக யோசித்தால் எதிர்மறையாக இருப்பவர்கள் இணைவார்கள். எனவே அன்பை பகிருங்கள். மீண்டும் அன்பையே பெறுவீர்கள் இவ்வாறு தமன்னா கூறினார்.