விபத்து வழக்கில் 2வது முறையாக கோர்ட்டில் ஆஜரானார் நடிகை யாஷிகா

சென்னை: 2வது முறையாக ஆஜரானார்... விபத்து வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார்

நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி அவரது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு சென்னைக்கு காரில் திரும்பினார். அப்போது, மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், யாஷிகாவின் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த வள்ளிபவானி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் வாய்தா கடந்த மார்ச் 21 ஆம் தேதி வந்தபோது யாஷிகா ஆஜராகவில்லை. இதனால் கடந்த 23 ஆம் தேதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார்.

தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி (இன்று) மீண்டும் அவர் ஆஜராக வேண்டும் என நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணைக்காக இன்று யாஷிகா ஆனந்த் மீண்டும் ஆஜரானார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை மாதம் 27 ஆம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருக்கிறார்.