அற்புதமாக ஐஸ்வர்யா ராய் நடித்த படம்... கணவர் அபிஷேக்பச்சன் பெருமிதம்

மும்பை: இன்றைய தேதி வரையில் ஐஸ்வர்யா ராயின் சிறந்த நடிப்பென்றால் அது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம்தான். நம்பமுடியாத அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார் என்று அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

1997இல் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். பின்னர் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன் படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஹிந்திப் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார்.

2007இல் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளானார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இரண்டு பாகமும் சேர்த்து ரூ.800 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் கூறியதாவது:

இன்றைய தேதி வரையில் ஐஸ்வர்யா ராயின் சிறந்த நடிப்பென்றால் அது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம்தான். நம்பமுடியாத அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். பழக்கப்பட்ட கதாபாத்திரம் போல நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஐஸ்வர்யா அற்புதமான நடிகை. அவரை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.