ஒன்றரை மணிநேரம் பிணமாக நடித்து அசத்தியுள்ள நடிகர் பிரபுதேவா

சென்னை: இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கும் படத்தில் நடிக்கும் பிரபுதேவா சுமார் 90 நிமிடம் பிணமாக நடித்து அசத்தியுள்ளாராம். இதற்கு முன்பாக மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் 15 நிமிடம் நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சக்தி சிதம்பரம் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகரும் நடன கலைஞருமான பிரபு தேவா. 20022இல் சார்லி சாப்ளின், 2019இல் சார்லி சாப்ளின் 2 படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது பெயரிடப்படாத 3வது படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு மடோனா செபாஸ்டியன் ஜோடியாக நடித்து இருக்கிறார். டிரான்ஸ் இண்டியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிட் சார்பில் எம்.ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார்.

இதில் யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கவுள்ளார்.

படத்துக்கு மக்களே பெயரிட உள்ளதாக இயக்குநர் பிரபல இணைய ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் இயக்குநர் சக்தி சிதம்பரம், “படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரபுதேவா இதில் சுமார் 90 நிமிடம் பிணமாக நடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் 15 நிமிடம் நடித்துள்ளார். ஆனால் ஒரு மணிநேரம் அப்படி நடிப்பது மிகவும் கடினம். க்ளோஸ்-அப் காட்சிகளில் மூச்சு விடக்கூடாது என்பதால் அவரது அசத்தலான நடிப்பினால் மெச்சும்படி ஆக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்கு கதை எழுத 3 ஆண்டுகள் ஆனது. படத்துக்கு மக்களே பெயரிடுவார்கள். டிசம்பரில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.