அரசியலுக்கு வருகிறேனா? நடிகர் அபிஷேக் பச்சன் கொடுத்துள்ள விளக்கம்

மும்பை: அரசியலுக்கு வருகிறாரா அபிஷேக் பச்சன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்று அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனாக சினிமாவில் அறிமுகமான அபிஷேக் பச்சனுக்கு பல படவாய்ப்புகள் வந்தன. இதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அபிஷேக் பச்சன் சமாஜ்வாடி கட்சியில் இணைவதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் இணையதளத்தில் தகவல் பரவியது. அமிதாப் பச்சன் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார்.

அபிஷேக் பச்சனின் தாயும் நடிகையுமான ஜெயா பச்சனும் சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. எனவே சமாஜ்வாடி கட்சியில் இணைந்து அமிதாப் பச்சன் போட்டியிட்ட அதே தொகுதியில் போட்டியிட அபிஷேக் பச்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்து அபிஷேக் பச்சன் கூறும்போது, “நான் அரசியலில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு அரசியல் ஆர்வம் கொஞ்சமும் இல்லை” என்றார்.