சூரரைப்போற்று பாடல் குறித்த புகார்; நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சூரரைப்போற்று படத்தின் பாடல் குறித்த புகார் ஒன்றுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் குறித்து காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தொடர்ந்து வருகிறது. இதையடுத்து அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி ஒருவர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி சூர்யாவுக்கு ஆதரவாக 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு எதிரான புகார் ஒன்று குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.