சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ - நடிகை குஷ்பு விளக்கம்

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. இதுகுறித்து குஷ்பு விளக்கமளித்து, மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த ஆடியோவில் ஊடகத்தில் இருப்பவர்களை ‘அவன் இவன்’ என்று அவர் பேசியதாகவும், பத்திரிகையாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் பேசியதாக தெரிகிறது

இது குறித்து குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:- ‘நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது. எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். எனது நோக்கம் தெளிவானது, ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் தொனிதான்.

ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் (சிலர்) அதற்கு சாட்சி. திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள். அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எந்தத் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. நான் அதைத் தொடர்வேன். இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.