அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா... படப்பிடிப்பு நிறுத்தம்

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால் அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரை ரஜினிகாந்த் அறிவுறுத்தினார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது.

ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட வேகமாக காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார்.