நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியானது

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா... ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 9-ம் தேதி, அதாவது இன்று முதல் ஹைதராபாத்தில் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சாரியா' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று தகவல் வெளியானது.

இதற்காக, ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. ஒரு ஊரையே அரங்கமாக அமைத்து பலரையும் வியப்படைய வைத்தனர். அந்த அரங்கில் 'ஆச்சாரியா' திரைப்படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில், கொடிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அந்த அரங்கில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.ஆந்திராவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, திரைப்படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கினாலும், 'ஆச்சாரியா' படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், எனக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை.

இருப்பினும் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கோவிட் 19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.