நடிகை வனிதா, பீட்டர்பாலுக்கு குற்றவியல் நீதிமன்றம் சம்மன்

முதல் மனைவி கொடுத்த வழக்கில் பீட்டர் பால், நடிகை வனிதாவுக்கு குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

முதல் திருமணம் விவாகரத்து ஆகாத நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தன்னைத் தரக்குறைவாகப் பொது இடத்தில் நடத்தியதாக பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் அளித்தார். இதையடுத்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் வனிதா, பீட்டர்பால் இருவரையும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில், வனிதா விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டது குற்றம் எனக் கூறி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோலக் காவல் ஆணையரிடமும் புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹெலன் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், கணவர் பீட்டர் பால் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார்தாரரான ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரங்களும், முகாந்திரமும் இருப்பதாகக் கூறி, வழக்குத் தொடர்பாக டிசம்பர் 23-ம் தேதி ஆஜராகும்படி, வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் உத்தரவிட்டுள்ளது.