நடிகர் நிதினை கடுமையாக சாடியுள்ளார் இயக்குனர் அம்மா ராஜசேகர்

ஐதராபாத்: நடிகர் நிதினை கடுமையாக சாடியுள்ளார் இயக்குனர் அம்மா ராஜசேகர். இது நிதின் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நிதின். இவரை சென்னையை சேர்ந்த பிரபல நடன இயக்குனரும், நடிகரும், தெலுங்கில் சில படங்களை டைரக்டு செய்துள்ளவருமான அம்மா ராஜசேகர் கடுமையாக சாடி உள்ளார்.

இவர் இயக்கி தயாரித்துள்ள ஹை பைவ் என்ற தெலுங்கு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் அம்மா ராஜசேகர் பேசும்போது, ''எனது பட விழாவுக்கு வரும்படி நிதினுக்கு அழைப்பு விடுத்தேன். வருகிறேன் என்று உறுதியளித்தவர் பின்னர் தனக்கு காய்ச்சல் என்று பொய் சொல்லி வராமல் இருந்து விட்டார்.

படத்தை வாழ்த்தி பேசி ஒரு வீடியோ வெளியிட கேட்டும் செய்யவில்லை. சினிமாவுக்கு வந்த புதிதில் நிதினுக்கு நடனம் தெரியாது. அவருக்கு நான்தான் நடனம் சொல்லி கொடுத்தேன். நான் அவருக்கு குருவாக இருந்தும் மதிக்கவில்லை, நிதின் பெரிய நடிகர் ஆகி விட்ட கர்வத்தில் என்னை அவமதித்து விட்டார்.

குருவுக்கு மரியாதை கொடுக்காத நீங்கள் சூப்பர் ஸ்டார் நடிகர் ஆகமுடியாது. உங்களை நம்பி நான் ஏமாந்து விட்டேன் என்றார். இவரது இந்த பேச்சு நிதின் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.