திரிஷா பேசுவது யாரிடம்... குறும்படத்தின் டீசரில் டுவிஸ்ட் வைத்த கவுதம் மேனன்

திரிஷா பேசுவது யாரிடம் என்பதுதான் தற்போது கோலிவுட்டில் உலா வரும் பெரும் பேச்சு.

இயக்குனர் கவுதம் மேனன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார்.
சிம்பு - திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை.


இந்நிலையில் நடிகை திரிஷா, வீட்டில் இருந்தபடியே கவுதம் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக தான் இந்த குறும்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். 'கார்த்திக் டயல் செய்த எண்' என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா துறை முடங்கியதால் சோகத்தில் இருக்கும் கார்த்திக்கிற்கு ஜெஸ்சி ஆறுதல் கூறுவது போல இந்த குறும்படத்தின் டீசர் அமைந்துள்ளது.

அந்த டீசரில் திரிஷா பேசுவது மட்டுமே காட்டப்பட்டுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகத்தின் கதையை தயார் செய்துவைத்துள்ள கவுதம் மேனன், அதன் ஒரு பகுதியை தான் இந்த குறும்படமாக எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் இந்த குறும்படத்தில் சிம்பு நடித்துள்ளாரா, இல்லையா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.