தான் காதலித்த பெண்ணையே மணந்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

சென்னை: இயக்குனருக்கு திருமணம்... சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், தனது நீண்ட நாள் காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இரும்புத்திரை படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்த படம் ஆன்லைனில் நடக்கும் நூதன மோசடிகளை தோலுரித்துக் காட்டியது. படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்தார்.

சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கல்வியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசி இருந்த படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர்ஹீரோவாக நடித்திருந்தார்.

இரும்புத்திரையில் வில்லனாக மிரட்டிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் தான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து நடிகர் கார்த்தி உடன் கூட்டணி அமைத்தார் மித்ரன்.

இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் சர்தார். பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் மித்ரனின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

இவர் பிரபல சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரைத் தான் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.