மதிப்பெண் பெறாதோர் வருந்த வேண்டாம்...பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியது. மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இணையதளங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர்.

இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 92.3 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் தோல்வி அடைந்த மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம் என்றும் அடுத்த முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் யாரும் தவறான முடிவை எடுத்து விட வேண்டாம் என்றும் பலர் தங்களது சமூக வலைதளங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு குறித்தும், மதிப்பெண்கள் குறித்தும், உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:-

மாணவ கண்மணிகள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள். பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.