காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் பிரபல நடிகை சமந்தா

மும்பை: ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்று இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியில் பிரபல டாக் ஷோ நிகழ்ச்சியான ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்று இருக்கிறார். பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பல சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே வெகு பிரபலம். இதில் பல பாலிவுட்டின் முன்னணி கலைஞர்கள் பங்கேற்பார்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் புது சீசன் தற்போது ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை பாலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாது தெலுங்கில் இருந்து பல முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குழுவினர் முதன் முதலில் பங்கேற்றார்கள். பின்பு, அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்., பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த வரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா இப்போது பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை அவர் சமீபத்தில் முடித்து இருக்கிறார். இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாள் தன்னுடைய வாழ்வில் சிறந்த நாள் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, நடிகை சமந்தா தெலுங்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளராக ஒரு எபிசோட் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதே போல, ‘ஆஹா’ தெலுங்கிலும் சமந்தா சாட் ஷோ பிரபலங்களுடன் நடத்தி இருக்கிறார். மேலும் தெலுங்கு பிக்பாஸ் ஆறாவது சீசனை இவர் தொகுத்து வழங்குவார் என்ற பேச்சும் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.