அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கும் ஜி.வி.பிரகாஷின் 3 படங்கள்!

ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள், ஜெயில், பேச்சிலர் ஆகிய 3 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது.

கொரோனாவால் முடங்கிய படங்களின் படப்பிடிப்புகள் இப்போது மீண்டும் தொடங்கி உள்ளன. சசியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் 'பேச்சிலர்' படத்தில் நடித்து வந்தார். நாயகியாக திவ்ய பாரதி நடித்தார். மிஷ்கின் உள்ளிட்ட மேலும் பலர் படத்தில் உள்ளனர்.

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தியபோது கொரோனா பரவலால் தடங்கல் ஏற்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதால் பேச்சிலர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் நடித்த முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள்.

15 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே எழில் இயக்கிய ஆயிரம் ஜென்மங்கள், வசந்த பாலன் இயக்கிய ஜெயில் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த 3 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள சூரரை போற்று படம் வருகிற 30-ந்தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.