இறுதிக்கட்ட பணியில் ஹரீஸ் கல்யாண் திரைப்படம்!

காதலும், நகைச்சுவையும் கலந்த படங்களுக்கு, எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில் புதுசாக, 'ஓமணப்பெண்ணே' படம் இடம்பெறுகிறது. இது, ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய 'பெல்லி சூப்பலு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு. ஹரீஸ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.

ஹரீஸ் கல்யாண் நடித்த 'தாராள பிரபு', 'ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய 2 படங்களும் வெற்றிகரமாக ஓடியதால், 'ஓமணப்பெண்ணே' படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது என்று படத்தின் டைரக்டர் கார்த்திக் சுந்தர் கூறியுள்ளார்.

இந்த படத்துக்குப்பின் ஹரீஸ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்து மேலும் பல படிகள் உயரும் என்று தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாராயணா மற்றும் ரமேஷ் வர்மா பென்மட்சா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

படம் குறித்து டைரக்டர் கார்த்திக் சுந்தர் கூறுகையில், படத்தின் கதைப்படி, ஹரீஸ் கல்யாண் பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பார். சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர். அம்மா, அப்பாவின் கட்டாயத்தால் என்ஜினீயரிங் படிக்கிறார். கதாநாயகி பிரியா பவானி சங்கர், 'எம்.பி.ஏ.' பட்டதாரி. துணிச்சல் மிகுந்த பெண். படம் முழுவதும் சென்னையில் வளர்ந்து இருக்கிறது. 30 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டோம். இப்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன என்றார்.