சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டது குறித்து அவரது தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை அதிரடியாக கைது செய்த போலீசார், அவரை பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சித்ரா தற்கொலை தொடர்பாக கடந்த சில தினங்களாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். சித்ரா தற்கொலை வழக்கில் யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சித்ரா சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் ஒரு போதும் கேட்டது இல்லை. வரதட்சனையும் கேட்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அவர், உங்கள் பெண்ணுக்கு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதனை செய்தால் போதும் என்றுதான் சித்ராவின் பெற்றோரிடம் கூறி இருந்தோம்.

எனது மகனை போலீசார் அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. சித்ரா தற்கொலை வழக்கில் போலீசார் யாரையோ காப்பாற்ற பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.