நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பேன்... பிரபல நடிகர் உறுதி

ஐதராபாத்: மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கிறேன்' என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை.

இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற 'சைமா -2022' விருது வழங்கும் விழாவில் விஜய் தேவரகொண்டாவிற்கு 'யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியன் சினிமா' என்ற விருது வழங்கப்பட்டது. இதில் பேசிய விஜய் தேவரகொண்டா, 'நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் நம் அனைவரது வாழ்விலும் வரும். நம் வாழ்வில் மிக மோசமான நாட்களை கடந்திருப்போம்.


அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே வாழ்க்கையில் முக்கியமானது. இனி எனது பணியை சிறப்பானதாக செய்வேன். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கிறேன்' என்று கூறினார்.