ஒரே வாரத்தில் தேவர் மகன் ஸ்கிரிப்ட் எழுதினேன்; சுவாரஸ்ய தகவல் சொன்ன நடிகர் கமல்

ஒரே வாரத்தில் தேவர் மகன் ஸ்கிரிப்டை தயார் செய்ததாக
ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடிய போது கமல் தெரிவித்துள்ளார்.

தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.



தேவர்மகன் 2-ம் பாகத்தை தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோரும் இப்படத்தில் கமலுடன் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடினார் நடிகர் கமல். அப்போது தேவர்மகன் படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தேவர் மகன் படத்தின் இயக்குனர் பரதன், ஒரே வாரத்தில் படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால் தான் இந்த படத்திலிருந்து விலகி விடுவதாக கூறினார். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு 7 நாட்களில் தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தேன். மேலும் இப்போது என்னிடம் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்தாலும் ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுத சொன்னால் முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.