ஹரி மற்றும் அருண்விஜய் இணையும் படம் குறித்த சுவாரசிய தகவல்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் இணைந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஹரி மற்றும் அருண்விஜய் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்றாலும் இருவரும் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் தற்போதுதான் முதல்முறையாக ஒரு திரைப்படத்தில் இணைகின்றனர்.

அருண் விஜய் தற்போது ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து வந்துள்ளதும், ஹரியின் வழக்கமான ஆக்சன் படங்களுக்கு அவர் தற்போது பொருத்தமாக இருப்பார் என கருதுவதாலும் தற்போது இருவரும் இணைந்துள்ளனர். எனவே இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இயக்குனர் ஹரியின் வழக்கமான படங்கள் போலவே இந்த படமும் ஆக்சன், பேமிலி செண்டிமெண்ட் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். அதேபோல் வழக்கம்போல் தென்மாவட்டங்களில் தான் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும், ஒருசில காட்சிகள் சென்னையிலும் படமாக்க ஹரி திட்டமிட்டுள்ளார்.

விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் இன்று மாஸ் நடிகர்களாக இருப்பதற்கு ஹரியின் இயக்கத்தில் கிடைத்த வெற்றிப்படங்களும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் ஹரியின் இயக்கத்தில் நடிக்கும் அருண்விஜய்யின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.