800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டாரா?

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான '800' திரைப்படத்தில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு திரை உலகம் மற்றும் அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சற்று முன்னர் முத்தையா முரளிதரன் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி அதில் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முத்தையா முரளிதரனின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில்‌ சிலரால்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள்‌ காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்‌. என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ 800 படத்தில்‌ இருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதி அவர்களுக்கு சிலர்‌ தரப்பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌ எனவே என்னால்‌ தமிழ்‌ நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதி அவர்களின்‌ கலை பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்‌.

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்துவிடவில்லை அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்கால தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு, உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்‌ அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும்‌ கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌ அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும்‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்‌ தமிழ்‌ திரைப்பட கலைஞர்களுக்கும்‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்‌
பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு முத்தையா முரளிதரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த விஜய்சேதுபதி, 'நன்றி வணக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக கருதப்படுகிறது.