இடைவேளை விடாமல் படத்தை திரையிட முடியாது என உறுதி

சென்னை: இடைவேளை விடாமல் படத்தை திரையிட முடியாது என்று நயன்தாரா படத்தை வெளியிடும் தியேட்டர்கள் உறுதியாக தெரிவித்து விட்டதாம்.


அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சத்யராஜ், வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஒரு பேய் படம் தயாராகி வருகிறது. கொரோனா லாக்டவுனின் போது நயன்தாரா தனது மகளுடன் வீட்டில் இருக்கும்போது எப்படி அமானுஷ்யத்தில் சிக்கிக் கொள்கிறார், அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

படம் மொத்தம் 99 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு இடைவேளை இல்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. வழக்கமாக இடைவேளையின் போது, பார்வையாளர்கள் வெளியே வந்து தியேட்டர் கேண்டீனில் உணவு வாங்குவார்கள்.

அதனால் இடைவேளையின்றி கனெக்டை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறும்போது, ”நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு இடைவேளை இல்லை என்று அவர்களே அறிவித்துவிட்டனர். இதுபற்றி இன்னும் தியேட்டர் அதிபர்களுக்குத் தெரிவிக்கவில்லை. இடைவெளி இல்லாமல் படத்தைத் திரையிட முடியாது” என்றார்.