புஷ்பா - தி ரூல் படத்தில் நடிகை சாய்பல்லவி இணைந்துள்ளதாக தகவல்

சென்னை: 'புஷ்பா - தி ரூல்' படத்தில் நடிகை சாய்பல்லவி இணைந்துள்ளார். அவர் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய புஷ்பா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படம் வெளியானதிலிருந்து புஷ்பா படத்தின் வசனங்களும் பாடல்களும் அனைவரது வாயிலும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. இதில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ் போன்றோர் நடித்திருந்தனர்.

செம்மரக்கட்டை கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.

'புஷ்பா - தி ரூல்' என்ற தலைப்புடன் இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஒகஸ்ட் மாதம் தொடங்கியது.

இந்நிலையில் 'புஷ்பா - தி ரூல்' படத்தில் இன்னுமொரு நடிகை இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்படத்தில் இணைந்துள்ள அந்த நடிகை சாய்பல்லவி எனவும் இதற்காக அவர் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் திகதி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.