புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு வரும் 1ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்

ஐதராபாத்: 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் வெகுவாக உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இந்திய சினிமாவையே புரட்டிப்போட்ட திரைப்படம் 'புஷ்பா'. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வெளியானது. முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் வாரி குவித்தது.

இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கியது. இதையடுத்து கடந்த மாதம் இரண்டாம் பாகத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதனை அல்லு அர்ஜூனின் நிறுவனமான அல்லு ஸ்டுடியோ உறுதிப்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.