மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்த படியே சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார். இதனை அடுத்து அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். எனவே இதன் காரணமாக நீண்ட நாட்களாகவே பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார்.

இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமையன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்துக்கு 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.