நான்கு நாட்களில் ரூ.500 கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்

மும்பை: ஜவான் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ. 500 கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்துள்ளது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி ஆகியோர் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் நான்கே நாட்களில் உலகம் முழுவதும் 520 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்த ஜான் தென்ந்திய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. ஆனால், இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தென்ந்திய மொழிகளில் ஏற்கனவே வெளியான படங்களில் தாக்கம் ஜவான் திரைப்படத்தில் இருப்பதன் காரணமாக இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்ந்திய மொழிகளில் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்ப்பார்பை நிவர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதேநேரம் உலகம் முழுவதும் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, முதல் நாளில் 129 கோடி, இரண்டாம் நாளில் 111 கோடி, மூன்றாம் நாளில் 144 கோடி என மூன்று நாட்களில் 384 கோடியை ஜவான் திரைப்படம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை மட்டும் 144 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை எந்த படமும் வசூலிக்காத சாதனை நிகழ்த்தி காட்டியது ஜவான், அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரூ.136 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி நான்கே நாட்களில் இப்படம் 500 கோடியை கடந்து ரூ.520 கோடிக்கு மேல் உலகளவில் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரிகான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.