படப்பிடிப்பிற்கு கணவருடன் வந்த காஜல் அகர்வால்; மாலை அணிவித்து மரியாதை செய்த படக்குழுவினர்

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றனர்.

இந்த நிலையில் தேனிலவை முடித்து விட்டு சமீபத்தில் மும்பை திரும்பிய காஜல் அகர்வால் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சாரியா' ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டிருந்ததால் விரைவில் இரண்டு படங்களின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிரஞ்சீவியின் 'ஆச்சாரியா' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்துகொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு கணவருடன் காஜல் அகர்வால் வந்தபோது சிரஞ்சீவி உள்பட 'ஆச்சாரியா' படக்குழுவினர் கெளதம்-காஜல் அகர்வால் தம்பதிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

மேலும் படப்பிடிப்பு நடக்கும் முன்னர் கேக் வெட்டி தனது திருமணத்தை கொண்டாட்டமாக பட குழுவினருடன் சேர்ந்து காஜல் அகர்வால் கொண்டாடினார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.