மனசாட்சியுடன் சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கு கமல்ஹாசன் மற்றும் ஜிவி பிரகாஷ் பாராட்டு

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைதாகி, நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்து வருகிறது.

குறிப்பாக இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ரேவதி அவர்கள் சொன்ன சாட்சி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை அடுத்து தைரியமாக மனசாட்சியுடன் சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் குறித்து தைரியமாக சாட்சி கூறிய காவலர் ரேவதி அவர்களுக்கு கமல்ஹாசன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

அதேபோல் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் ரேவதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன்... உங்களோடு தேசம் துணை நிற்கிறது என்று கூறியுள்ளார்.