மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் தள்ளி வைப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு புதிய மேக்கப் தொழில்நுட்பம் குறித்து அவர் கற்றுக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இது சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. எனவே இதனால் கமல்ஹாசனின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் பட அமோக வெற்றி மூலம் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்த கமல்ஹாசன் அதே சூட்டோடு சூடாக சுற்றுப்பயணத்துக்கு வருவார் என்றுதான் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நம்பி கொண்டிருந்தனர்.

இதை அடுத்து கமல்ஹாசன் எந்தெந்த மாவட்டங்களில் எங்கெங்கு பேச வேண்டும் என்றெல்லாம் கூட பட்டியல் தயாரித்து வைத்திருந்தனர். ஆனால் இப்போது அவை அனைத்தும் முடங்கி உள்ளது.

எனவே இதனால் நிர்வாகிகள் சிலர் வருத்தம் அடைந்துள்ளார்களாம். மேலும் கமல் கட்சிக்கு இன்னமும் சில மாவட்டங்களில் முழுமையான நிர்வாகிகள் இல்லை. அதையாவது முதலில் சரி செய்யுங்கள் என பலரும் மனக்குறையுடன் உள்ளனர்.