ருத்ரன் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் இயக்கிய ருத்ரன் படத்தின் ஹிந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ருத்ரன் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ரெவன்சா குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏப்ரல் 24ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும், மனுவுக்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.