இமயமலை பகுதிகளில் பைக் சவாரி... மலரும் நினைவுகளை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் அதன்பின்னர், விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் நாயகியாக நடித்துள்ள நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மாளவிகா ஒரு பைக் பிரியர் என்பதும், ஃபார்முலா ஒன் பந்தயத்தில் அவர் மிகச்சிறந்த பைக் ரைடர்களுடன் பைக் ஓட்டியதாகவும் செய்திகள் வெளிவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் ரைடிங் என்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் மிகச்சிறந்த பைக் ரைடர்கள் சிலருடன் பைக் ஓட்டியதாகவும் அவரே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். மேலும் தன்னால் சாம்பியன் பைக் ரைடர்கள் போல் வேகமாக பைக் ஓட்ட முடியாது என்றாலும், என்னுடைய வாழ்நாள் முழுவதும் ரெகுலராக பைக் ஓட்டுவதில் ஈடுபடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் பைக் ஓட்டுவதை நான் மிஸ் செய்கிறேன்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லடாக்கின் அதிசயமான மற்றும் அபூர்வமான நிலப்பரப்புகளில் பைக் சவாரி செய்த தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றித் திரிந்த நினைவுகள் அவ்வபோது தனது மனதில் மலரும் நினைவுகளாக வந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

காரில் செல்வது செளகரிமான ஒன்று என்றாலும் பைக்கில் இமயமலை பகுதியில் செல்லும்போது அங்கு வீசும் காற்று நம் முகத்தில் அறையும்போது ஏற்படும் உணர்வுக்கு ஈடு இணை இல்லை என்றும், சில சமயங்களில் ஆலங்கட்டியும் முகத்தில் விழும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அனுபவத்தை மீண்டும் ரசிக்க காத்திருப்பதாகவும், இயல்பு நிலை விரைவில் திரும்பும் என தான் எதிர்பார்ப்பதாகவும் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.