ஊரடங்கால் என்னுடைய ஆசை நிறைவேறவில்லை; மாளவிகா மோகனன் வருத்தம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பது போல் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் மிகப்பெரிய அளவில் இந்த படத்தை எதிர்பார்ப்பதாகவும், இந்த படம் வெற்றி பெற்றவுடன் தென்னிந்திய திரையுலகில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பின் மாளவிகா ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தன்னுடைய ஆசை நிறைவேறவில்லை என்று சமீபத்தில் ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

தனக்கு பயணங்கள் அதிகம் செய்ய வேண்டும், புதுமையான மக்களைப் பார்க்க வேண்டும், புதுப்புது கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் இதனால்தான் பல நாடுகளுக்கும் தான் பயணம் செய்து வருவதாகவும் மாளவிகா மோகனன் அந்த பதிலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.