கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதைய ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து திரையரங்குகள் திறந்தாலும் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே திரையரங்குகள் திறந்தவுடன் முதல் படமாக விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை திரையிட்டால், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் பயம் குறையும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. எனவே திரையரங்குகள் திறந்தவுடன் விஜய் மாஸ்டர்’ திரைப்படம் தான் முதலில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் கேயார் கூறியபோது, ‘திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், விஜய்யின் ’மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதல் படமாக ’மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்துள்ளார். ’மாஸ்டர்’ படக்குழுவினர் இதுகுறித்து என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்