மாஸ்டர் படம் நிச்சயம் ஓடிடியில் வெளியாகாது...இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

விஜய்யின் மாஸ்டர் திரைபடத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் மீண்டும் தகவல்கள் பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்து ஊரடங்கினால் திரைக்கு வராமல் உள்ளது. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன்தாஸ், கவுரி கிஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தை தியேட்டருக்கு பதிலாக இணைய தளமான ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் இதற்காக முன்னணி ஓடிடி தளம் சார்பில் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

தியேட்டர் அதிபர்களோ ஊரடங்கு முடிந்ததும் முதல் படமாக மாஸ்டர் படத்தை திரையிட்டு ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு இழுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், மாஸ்டர் படத்தை ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டோம். படவேலைகளையும் வேகமாக முடித்தோம். படம் ரிலீசாக 20 நாட்கள் இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வரவில்லை.

இது எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் மாஸ்டர் படம் நிச்சயம் ஓடிடியில் வெளியாகாது. தியேட்டரில்தான் ரிலீசாகும். அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாகுமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்னென்ன விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பதை பொறுத்து ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என்றார்.