கணவர் இறந்த பின் மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய மீனா

சென்னை: தனது கணவர் இறந்தபின் மகளின் முதல் பிறந்தநாளை கப்பலில் கொண்டாடி இருக்கிறாராம் நடிகை மீனா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை மீனா தென்னிந்திய மொழி சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். தற்போது அவர் குணச்சித்திர ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார். அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் 2022 ஜூன் 28ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். புறா எச்சத்தில் இருந்து அவருக்கு தொற்று பரவியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


தற்போது மீனா இந்த துயரத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். அவ்வப்போது அவரது தோழிகள் உடன் மீனா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. மேலும் மீனா இரண்டாம் திருமணம் விரைவில் செய்ய இருக்கிறார் என தகவல் பரவிய நிலையில் அது முற்றிலும் பொய்யான செய்தி என அவர் விளக்கம் கொடுத்து இருந்தார்.

இன்று ஜனவரி 1, நைனிகாவுக்கு பிறந்தநாள். அப்பா இறந்த பிறகு நைனிகா அம்மா மீனா உடன் மட்டும் கொண்டாடும் பிறந்தநாள் இது. மகள் நைனிகாவுக்கு வாழ்த்து சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் மீனா. கப்பல் தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ தான் அது.