தியேட்டர்கள் திறந்ததும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகும்!

இந்தியா முழுவது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. ரிலீசுக்கு தயாராக இருந்த பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியாத நிலையில் உள்ளது. ரசிகர்களும் புது படங்கள் வெளியாகாததால் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் ஓரளவு சந்தோசம் அடைந்தனர். ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் 29-ம் தேதி ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக கீர்த்தி சுரேஷின் ’பெங்குவின்’ திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதை போன்று, மேலும் சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் கசிந்தன.

இது குறித்து மூக்குத்தி அம்மன் படத்தின் இயக்குனரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி கூறியதாவது:- ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை ஒடிடி பிளாட்பார்மில் வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளியாகும் முதல் திரைப்படமாக ’மூக்குத்தி அம்மன்’ படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.