நடிகர் ராணா திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு புது கட்டுப்பாடுகள்!

தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் நடித்துள்ள ராணா பாகுபலியில் வில்லனாக மிரட்டி மேலும் பிரபலமானார். தெலுங்கில் முன்னனி கதாநாயகனாக வலம் வருகிறார்.

ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு திருமணத்தை நடத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா இப்போதைக்கு ஒழியாதுபோல் இருப்பதால் நாளை மறுநாள் (8-ந்தேதி) ஐதராபாத்தில் திருமணம் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த நிலையில் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்து இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் திருமணத்துக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த திருமணத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், பிரபாஸ், வருண் தேஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.