படம் பார்க்கவில்லை... ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

சென்னை: காந்தாரா படம் குறித்து நடிகை ராஷ்மிகா கூறுகையில், இன்னும் படத்தை பார்க்கவில்லை என்று தெரிவித்தார். இது கன்னட ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. வளர்த்து விட்டவரை மறந்துவிட்டார் என்று ராஷ்மிகாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடல் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

இந்நிலையில் ராஷ்மிகா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவருக்கும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என்று கிசுகிசுத்தனர். கன்னடத்தில் ரிஷாப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கிய காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தை ரஜினிகாந்தும் பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார். ராஷ்மிகாவை, ரிஷாப் ஷெட்டிதான் 2017-ல் இயக்கிய கிர்ரிக் பார்ட்டி படத்தில் அறிமுகப்படுத்தினார். ராஷ்மிகாவிடம் காந்தாரா படம் குறித்து கேள்வி எழுப்பியபோது அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றார்.

இது கன்னட ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. வளர்த்துவிட்டவரை மறந்துவிட்டார் என்று ராஷ்மிகாவை வலைத்தளத்தில் மோசமான வார்த்தைகளால் வசைபாடியும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.