நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் கடந்தாண்டு ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கி, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி கைப்பற்றினார்.

அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்றும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வரை சென்றும், அவருக்குசாதகமாக தீர்ப்பு அமையவில்லை.


இந்த நிலையில் மக்கள் மன்றமே தீர்வு எனக் கருதி, மாவட்ட வாரியாக தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கும் விதமாக பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குகிறார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து, 1 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி உள்ளார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்க உள்ள நிலையில், இச்சந்திப்பு நடைபெற்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.