பாலிவுட்டில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக நடக்கும் சதிக்கு எதிர்ப்பு தெரிவித்த கவிஞர் வைரமுத்து

ஆதரவு தெரிவித்த வைரமுத்து... தனக்கு எதிராக இந்தி திரையுலத்தில் பெரிய சதி நடப்பதாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்த நிலையில், அவருக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

திறமை வாய்ந்த இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறப்பிற்கு, இந்தி திரையுலகின் சாம்ராஜ்யமாக கருதப்படும் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்து வந்தது. இதனால், ரசிகர்களிடத்தில் அவர்கள் மீது கடும் அதிருப்தி உருவானது.

மேலும், வளர்ந்து வரும் நடிகர்களுக்கு சில முன்னணி நடிகர்கள் இடம் கொடுப்பதில்லை என நடிகர்கள், நடிகைகள் சிலருமே, சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தி திரையுலகில் தனது இசைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு கும்பல் சதி செய்து வருவதாக பிரபல இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏஆர் ரகுமான் கூறியிருந்தார்.

இது மீண்டும் இந்தி திரையுலகத்தினர் மீது வெறுப்பை உருவாக்கியுள்ளது. ஏஆர் ரகுமானுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்துவும் ஆதரவு கூறி டுவிட் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும், எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.