சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்தார்.

மேலும் இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அதிகாலை சிறப்பு காட்சி வெளியாவது வழக்கம். ஆனால் தற்போதைய கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த சிறப்பு காட்சி இருக்குமா? என்பது குறித்த கேள்வி எழுந்து உள்ளது.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது 'மாஸ்டர்' படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே 'மாஸ்டர்' திரைப்படம் திரைக்கு வரும்போது 50 சதவீத பார்வையாளர்கள் எண்ணிக்கையை 75 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து வேண்டுகோள் வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.