ரஜினிகாந்த் ஒரு அற்புதமான மனித நேயம் உள்ளவர்; ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை கடந்த சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி செய்து வருகிறார். இந்த நிலையில் 'மூக்குத்தி அம்மன்' புரோமோஷனின் ஒரு பகுதியாக இன்று டுவிட்டரில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரஜினிகாந்த் குறித்த கேள்வி ஒன்றுக்கு ஆர்ஜே பாலாஜி பதிலளித்து கூறியதாவது:- நான் சூப்பர் ஸ்டாரின் ரொம்ப ரொம்ப பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் தாத்தா 'ரஜினி ஒரு நல்ல மனிதர்' என்று கூறினார். அது என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து உள்ளது. ரஜினிகாந்த் ஒரு அற்புதமான மனித நேயம் உள்ளவர். ஒரு சூப்பர்மேன்.

தளபதி முதல் தர்பார் வரை அவரை பத்தி நிறைய நினைவுகள் எனக்கு உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி ஒன்று கொடுத்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. நான் அப்படி பேசியிருக்க கூடாது என்று தோன்றும். அதற்காக நான் மிகுந்த வருத்தப்பட்டேன்.

நான் அவருக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அவருக்கு அனைத்து சந்தோசங்களும் அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். இது போன்று அவர் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.