சர்வம் சுந்தரம் படம் திரையரங்குகளில்தான் ரிலீஸ்; இயக்குனர் திட்டவட்டம்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் திரையரங்குகளில்தான் ரிலீஸ் ஆகும் என்று இயக்குனர் ஆனந்த்பால்கி தெரிவித்துள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், 'சர்வர் சுந்தரம்'. இதை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயின்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை, துபாய் வரை சென்று முடிவது போல அமைக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் நடித்த பழைய 'சர்வர் சுந்தரம்' படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று வாங்கி இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர். இதில் நாகேஷ் பேரன் பிஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது.

இந்தப் படத்தை, தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்வதற்காக, கெனன்யா பிலிம்ஸிடம் இருந்து மிராக்கிள் மூவிஸ் என்ற நிறுவனம் வாங்கியது. இந்நிறுவனம் சினிமாவுக்கு புதிது. இந்த நிறுவனத்திடம் இருந்து சிலர், சில ஏரியாவுக்கு வினியோகம் பண்ண படத்தை வாங்கி இருக்கிறார்கள். வாங்கியவர்கள் அதை வேறு சிலரிடம் அடமானம் வைத்துவிட்டார்கள்.

இதனால் ஐந்து ஏரியாவில் பிரச்னை ஏற்பட்டது, பின்னர் அதை சரி செய்து ரிலீஸ் செய்ய நினைக்கும்போது மேலும் பிரச்னை ஏற்பட்டது. இந்த காரணத்தால் படம் ரிலீஸ் ஆகவில்லை. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என தள்ளிப் போன இந்தப் படம் லாக்டவுன் முடிந்ததும் வெளிவரலாம் என தெரிகிறது. இதற்கிடையே, படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, தனது ட்விட்டர் பதிவில் அவ்வப்போது தனது படம் பற்றி பதிவிட்டு வருவார்.

கடந்த சில நாட்களுக்கு முன், 'சர்வர் சுந்தரம்' படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா? என்று ட்விட்டரில் கேட்டிருந்தார். இதனால் இந்தப் படத்தை டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு பேசி வருகிறது எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஓ.டி.டி தளங்கள் கோலிவுட் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர், தமிழ்த் திரைப்படங்கள் சரியாக மதிப்பிடப்படுகிறதா என்று தெரியவில்லை.

ஓடிடி தளங்கள், கோலிவுட் என்றால் என்னவென்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. 'சர்வர் சுந்தரம்' படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல, குறிப்பாக சந்தானம் ரசிகர்களுக்கு இது நல்ல செய்தி' என்று கூறியுள்ளார். இதையடுத்து சந்தானம் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.